Saturday, June 28, 2014

உறக்கம் கலைத்த நீள் இரவும் சில சிந்தனைகளும்









உறக்கம் வரமறுத்து உள்ளம் அடம் பிடித்தழுத அந்த நீண்ட இரவு மறக்கக் கூடியதன்று.

பேரினவாதத்தின் கொடிய கரங்களுக்கிடையில் மீண்டுமொரு முறை முஸ்லிகள் நசுங்கிய அந்தக் கணங்கள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அடையாளச் சின்னம் நளீமிய்யா.
நளீமிய்யா முற்றுகையிடப்பட்டுள்ளது;ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல் வெளியே நிற்கிறது;உள்ளே ஆண்களும் பெண்களும் சின்னஞ்சிறுவர்களுமாய் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.நெஞ்சு பதை பதைத்து உயிருக்குள்ளால் ஒழுகத் துவங்கியது.

களுத்தறை, தர்கா நகர்,பேருவளை தொடங்கி தீயின் நாக்குகள் நாடெங்கும் பரவ கறுப்பு ஜூலை பற்றிய ஞாபங்கள் மறக்காமல் வந்து போயின.

அண்மையில் தான் கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரை ஒன்றினை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்திருந்தேன்.அந்த அதிபயங்கரமான அனுபவங்களின் விளைவாகத் தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கினார்கள்;அந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது அது மிக நியாயமாகத் தான் தெரிந்தது.

எத்தனை நாளைக்குத் தான் அடிமை வாழ்வு வாழ்வது,குறைந்த பட்சம் தற்காப்புக்கான ஏற்பாடுகளாவது தேவை என்று மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை என்னால் முழுமையாக நியாயப் படுத்த முடியாது;எனினும் அழிக்கப்படுபவன் எழுந்து போராடுவதைப் பற்றியும் எனக்கு இருகருத்து கிடையாது;அவன் எந்த இனம் சார்ந்தவனாக இருந்தாலும் சரியே.

முள்ளிவாய்க்காலில் நம் சகோதர தமிழினம் துடைத்தெறியப் பட்ட போது மெளனம் காத்தோம்.எவருக்கோ வந்த விருந்து நமக்கெதுக்கு என்று வாளாவிருந்தோம்.

மெளனம் ஒரு கையாலாகாத நிலை
மட்டுமன்று;மெளனம் ஒரு துரோகம்;மெளனம் ஒரு காட்டிக் கொடுப்பு.

அடக்குமுறையின் போது மெளனிப்பதன் வேதனையை இன்று சர்வநிச்சயமாக உணர்கிறோம்.

ஊடகங்கள்,அரசு,அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பெரும்பான்மைத் தோழர்கள் என நீளும் இந்த மெளனத்தின் அடர்த்தி வேதனையையும் விசனத்தையும் அதிகரிக்கின்றது.

மிகப்பெரிய பயங்கரம் மோசமான மனிதர்களின் அடக்குமுறைகளோ குரூரங்களோ அல்ல;நல்ல மனிதர்கள் அந்த அடக்கு முறைகள் மீதும் குரூரங்கள் மீதும் காட்டும் மெளனம் தான்” சொன்னவர் மார்டின் லூதர் கிங்

தீமைகள் நடக்கட்டும் என வாளாவிருப்பதும் ஒரு வகையில் அந்த அநியாயங்களுக்குத் துணை போவது போன்றது தான்;ஏனெனில் மறைமுகமாக அந்த அடக்குமுறையை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்;அதே வேளை அந்த அநீதியானது ,அதற்கெதிராகப் பேசுமாறோ அல்லது அதற்கெதிராகச் செயற்படுமாறோ உங்களை ரோஷமுறச் செய்யவுமில்லை.

இஸ்லாம் அமைதியின் மார்க்கம்.அமைதியின் அர்த்தம் உன் உள்ளங்காலுக்குக் கீழே நிலம் நழுவிக் கொண்டிருக்கும் போதும் பேசாமலிருப்பது அல்ல.
அதே நேரம் அநியாயம் செய்யப்பட்டவருக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்;அவர் ஒரு பெளத்தராக,இந்துவாக அல்லது கிரிஸ்தவராக இருக்கலாம்.

ஒரு மதத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ எதிராகவல்ல; அடக்குமுறைக்குகும் அட்டூழியத்திற்கும் எதிராக போராடுவதே அத்தியாவசியமானது;அது ஒரு முஸ்லிமின் பண்பும் கூட.

நம் கையால் நடக்கும் தவறுகளை நாமெல்லாம் முஸ்லிம்கள் என்று மறைக்கும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்ளங்கள் நமக்கு வேண்டாம்.
இனியாவது அநீதிகளுக்கெதிராய் குரல்களை உயர்த்துவோம்.

அது அரசாக இருந்தாலும் சரி,ஊடகங்களாக இருந்தாலும் சரி,நாம் சார் இயக்கங்களாக நிறுவனங்களாக இருந்தாலும் சரி பொது பல சேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களாக இருந்தாலும் சரி.,குற்றம் குற்றமே.

அடுத்தாக பெளத்த மதம் சார்ந்த எல்லோரையும் குரோதம் கொப்புளிக்கும் கண்களுடன் பார்க்க வேண்டாம்;அன்றாடம் நாம் பழகும் பேசும் ஒன்றாக வேலை பார்க்கும் பல சிங்கள சகோதர சகோதரிகள் இந்த வன்முறைகளுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள்.

எல்லோர்க்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது; அதற்கு இறைச்சி காட்டித் தூண்டி விடும் கைங்கரியத்தை சில தீவிரவாத அமைப்புக்கள் செய்கின்றன.

உணர்வுகள் தூண்டிவிடப் படும் போதும்,தனிநபர்கள் சேர்ந்து கும்பலாகும் போதும் மூளை மரத்துப் போய் விடுகிறது;நடுநிலையாககச் சிந்திக்கும் திறன் செத்தழிந்து விடுகிறது.

பெளத்தம் அகிம்சையின் இல்லம்;இந்தத் தாக்குதல்களுக்கு முதலில் இலக்காகியிருப்பது பெளத்த மதத்தின் அமைதிக் கொள்கைகள் தான்.மதங்களை நிந்திப்பது ரசூல் ஸல் அவர்களின் முன்மாதிரிகளுக்கு நேரெதிரானது.

ஒரு முயலைச் சிங்கமாகவும் ,சிங்கத்தை முயலாகவும் சித்தரிக்கக் கூடிய வல்லமை ஊடகங்களுக்கு உண்டு.அரசு சார் ஊடகங்களெல்லாம் கை கட்டி வாய் பொத்தி மெளனிக்க இணைய வழியே உண்மையான தகவல்கள் வெளித்தெரிய வந்தன.இவற்றில் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது.

Citizen Journalism எனும் பிரஜா ஊடகவியலின் பிரதான களமாக சமூக ஊடகங்கள் திகழ்ந்தன.இணைய இணைப்புக் கொண்ட எவரும் தங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் பிரஜா ஊடகவியலாளர்களாகின்றனர்.

எனினும் சமயங்களில் வதந்திகள் காட்டுத் தீ போலப் பரவவும் இதே பிரஜா ஊடகவியலாளர்களின் அனுபவமின்மையும் பொறுப்பற்றதன்மைகளும் காரணமாய் அமைந்ததையும் மறுக்க முடியாது.செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி நாமனைவரும் இரண்டு தரம் யோசிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

அல் குர்ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

நடந்த சம்பவங்களிலிருந்து பெறக் கூடிய படிப்பினைகளோடும் ஆழ்ந்த சாணக்கியத்தோடும் உணர்வுகளுக்கு மேலால் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனோநிலையோடும் முன் செல்வோம்.

சமீலா யூசுப் அலி

http://shameela2014.blogspot.com/
https://www.facebook.com/Shameela2013

Saturday, June 7, 2014

அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....

சம்பவம் 01

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மகன் ,பக்கத்தில் தாயும் தந்தையும் புளகாங்கிதத்துடனும் பூரிப்புடனும் நின்றிருக்கின்றனர்.பட்டம் பெற்ற மகனைப் பாராட்டி இரண்டு வார்த்தை பேச முடியாமல் உதடுகள் மெளனிக்கின்றன. மகனுக்கோ பெற்றோரைக்கட்டியணைக்க வேண்டும் போல் பொங்கிவரும் உணர்ச்சிகள் ஏனோ நீர் தெளித்த பாலாய் அடங்கிப்போகின்றன.

சம்பவம் 02

ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம்.தன் சகோதரியின் கட்டிலருகே ஓடோடி வரும் சகோதரன். சிறிது நேரம் தாமதித்து, கொண்டு வந்த உணவுப்பாத்திரத்தை கையில் கொடுத்து சுகம் விசாரிக்கிறார். தலை தடவி விட வேண்டும் போல குறுகுறுத்த கையை மெல்ல இழுத்துக்கொண்டு விடுகின்றது ஏதோவொன்று.

சம்பவம் 03

மனைவிக்குப் பிரசவம், சுற்றிய பூப்பந்தாய் ஒரு குழந்தை அருகில்.குழந்தையைக் கொஞ்சும் கணவனுக்கு மனைவியின் கை தடவி தன் அன்பைப் பகிர மிகுந்த கஷ்டமாயிருக்கின்றது.
சம்பவம் 04

தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ஓர் ஆங்கிலத்திரைப்படம். தாய் தந்தையுடன் அமர்ந்து பார்க்கும் ஒர் ஒன்பது வயதுச் சிறுமி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன். படத்தில் தாயைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கோ வெட்கம் வந்து விடுகிறது,ஓரக்கண்ணால் தாயையும் தந்தையையும் நோக்குகிறாள்.சிறுவனுக்கோ பெரும் சந்தேகம் “ஏன் என் தாய்,தந்தையர் அவ்வாறு என்னிடம் சொல்வதோ,கட்டியணைப்பதோ இல்லை’


அன்பை வெளிப்படுத்துவதை ஒரு குற்றமாகப்பார்க்கும் நம் சமூகத்தின் நிலையின் ஒரு சில துளிகளே மேலே கண்டவை.
கண்ட கண்ட இடத்தில் கண்களே கூசுமளவுக்கு ஆபாசமாக அன்பை வெளிப்படுத்தும் மேலைத்தேய வழக்கம் ஒரு புறம்; மறுபுறம் அன்பை வெளிப்படுத்துவதை ஆபாசக்கண் கொண்டு நோக்கி பதுங்கிக் கொள்ளும் கீழைத்தேய சமூகம்.

உங்கள் சகோதரருடன் உங்களுக்கிருக்கும் அன்பை வார்த்தைகளாலும் பகிரங்கப்படுத்துங்கள் என்ற நபிவழி வந்த வாரிசுகள் நாம்.ஆனால் இன்று சமூகத்தின் வரட்டு வேதாந்தங்களுக்கு செவிசாய்த்ததன் விளைவாகவும், வழமைக்கு மாறாக எந்த புதுவித வித்தியாசத்தினையும் செய்யக்கூடாது அது நன்மையாக இருந்த பட்சத்திலும் கூட, என்ற அதீத பிடிவாதத்தின் காரணமாகவும் நாம் நடந்து வந்த சுவடுகளை மறந்து விட்டிருக்கிறோம்.

மனிதனின் புலன்களில் தொடுகை என்ற உணர்வு பிரதானமான ஒன்று. ஆயிரம் வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை ஒரு அழுத்தமான தழுவலால் தர முடியும்.
சில நேரங்களில் வார்த்தைகள் கட்டாய மெளனத்துக்குள்ளாகின்றன; அப்போதெல்லாம் உடல்களுக்கிடையிலான தொடர்பாடல் தான் சாத்தியப்படுகிறது. இதனால் தான் சமூக விஞ்ஞானத்திலும் உளவியலிலும் உடல் மொழி எனப்படுகின்ற Body Language க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

எமது கலாச்சாரத்தில் இந்த அன்பை மொழிமூலம் வெளிப்படுத்துவதும் தொடுகை மூலம் வெளிப்படுத்துவதும் வெட்கம் தரக்கூடிய விடயமாகவும் சமயங்களில் தரக்குறைவான அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், காதல் அல்லது அன்பைக்குறிக்கும் லவ் என்ற ஆங்கிலச்சொல் முடியுமான அனைத்து வகையிலும் வர்த்தகமயமாகிவிட்டது. ஆண் பெண் இடையில் துளிர்த்து வளரும் எதிர்பால் ஈர்ப்பையே இங்கு அந்தச் சொல் அர்த்தப்படுத்துகின்றது என்பதே அனேகரின் அகராதி. நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உதடுகளால் நம் பெற்றோர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எம்மால் ஏன் உச்சரிக்க முடியாதுள்ளது?

அன்பை பரிமாறுவதை அதை வாய் விட்டு உரியவருக்குத் தெரிவிப்பதை உற்சாகப்படுத்தும் இஸ்லாத்தின் பெயரைக்கூறிக் கொண்டே அதை நாம் ஒரு வெறுக்கத்த விடயமாக மாற்றியிருக்கிறோம்.
இன்று விரிசலடையும் குடும்ப உறவுகளை மீள இணைக்கும் வல்லமை வாய்ந்த அன்பின் தொடர்ச்சியிலான அரவணைப்பு, ஆறுதலளிக்கும் தொடுகைகள் ஆரோக்கியமானவை.உடலுக்கும் உள்ளத்துக்கும் சந்தோசத்தையும் சாந்தியையும், நெருக்கத்தையும் இறுக்கமான பிணைப்புக்களையும் வலுப்படுத்தும் அன்பின் வெளிப்பாடுகள் அத்தியாவசியமானவை.

சில நிமிடங்கள் சிந்தியுங்கள், இன்று உங்கள் அன்பை வேண்டி நிற்கும் அரவணைப்பைத் தேடி நிற்கும் உள்ளங்கள் எவை;தயங்காது அன்பை வெளிப்படுத்துங்கள்.இந்தப் பயணத்தின் முதலடி உங்கள் பாதங்களே.

2012.March 15th
Shameela Yoosuf Ali