Wednesday, September 2, 2015

இரவுகள் விரும்பப்படுகின்றன.



Shameela Yoosuf Ali

ஒரு களைப்பூட்டும் நாளின் கரையோரம் இரவு.

நாள் முழுதும் சக்கரமோடிய ஒரு பெண்இரவின் மடியிலாவது கண்ணயர முயற்சிக்கிறாள்.

அவமானங்கள் கூர்முள்ளாய் உறுத்திய கணங்கள் இரவுக்குள் பூட்டப்படுகின்றன.





எங்கோ ஓர் மூலையில் ஒரு ஆண் ரகசியமாய் அழுது கொள்கிறான்.

குழந்தைகள் கனவில் சுவர்க்கத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.

ஒரு எழுத்து இராட்சசி அப்போது தான் எழுந்து கொள்கிறாள்.

கன்னிப்பெண் வருங்காலக் கணவனைக் கற்பனை செய்கிறாள்.

முதிர்கன்னியோ கன்னத்தின் கடைசி கண்ணீர் கோட்டை இரவின் சுவரில் வரைகிறாள்.

மனித மனதின் ஏமாற்றங்கள் ஒரு தூக்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன.

இரவு வரும் போது பெருமூச்சுகள் வருகின்றன.

ஏதோ ஒரு நிம்மதியில் இறுக மூடுகின்றன விழிகள்.

2014.May 19
9.47 pm
By Shameela Yoosuf Ali

No comments:

Post a Comment