Thursday, July 10, 2014

சின்ன உழைப்பாளிகள்- என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

தலையில் சுமக்க முடியாமல் கார்ட் போர்ட் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நோன்புகால பின் அஸர் பொழுதுகளிலே அந்தச் சிறுவர்களிருவரும் வருவார்கள்.

படீஸ் ரோல்ஸ் இந்த இரண்டும் பெட்டிகளுக்குள் கவனமாக அடுக்கப் பட்டிருக்கும்.பத்து ரூபாய் படீஸும் பதினைந்து ரூபாய் ரோல்ஸும் சுட சுட கொண்டு வரும் அந்த மெலிந்த ஆகிருதிகளைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாயிருக்கும்.குழந்தைப் பருவத்தை சில பிஞ்சுகள் மிக அவசரமாகத் துறக்க நேரிடுகிறது.

இருவருமே பாடசாலையில் படிக்கிறார்கள்,
நோன்புகாலங்களில் வீட்டில் செய்து தரும் உண்டிகளை விற்றுக் கொடுக்கிறார்கள்.வெள்ளையும்சொள்ளையுமாய் இவர்கள் வயதொத்த சிறுவர்கள் பள்ளிவாசல்களிலும் பாதை விளையாட் டுக்களிலும் ஈடுபட்டிருக்க கருமமே கண்ணாய் தெருவோரம் தலைச் சுமை கனக்க சென்று கொண்டிருப்பார்கள்.

நோன்பு அல்லாத காலங்களில் மாலை வேளைகளில் சோப்புடப்பா,சீப்பு,பிளாஸ்டிக் பாத்திரவகைகள் கொண்டு வருவார்கள்.தேவைகள் இல்லாத போதும் சமயங்களில் வாங்கி அந்த உழைப்பை பாராட்டத் தோன்றும்.

நாவூற வைக்கும் சுவை இல்லாத போதும் அந்தப் படீஸையும் ரோல்ஸையும் வாங்குவதும் அதே உழைப்புக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பதற்காகத் தான்;அதற்கு மேலால் அனுதாபங் கலந்த அன்பும் இல்லாமலில்லை.

இப்போது அந்தச் சிறுவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டார்கள்.

கடைக்குப் போகவே தன்மானம் பார்க்கும் அவர்கள் வயதொத்த இளவயதினருக்கிடையே இவர்களிருவரும் வித்தியாசமாகத் தெரிவார்கள்.

இளமையில் வறுமை என்பது கொடுமையான விஷயம் தான்.

எனினும் நிரம்பவே யோசிக்கும் போது இந்தச் சிறுவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணந்தோன்றுகின்றது.

நிறையச் சாதித்தவர்கள் சிறுவயதில் கடின உழைப்பும் கஷ்டங்களிலும் வளர்ந்தவர்கள்.துன்பங்கள் இவர்களைச் செதுக்குகின்றன.

அவமானம்,வலி இவைகளையெல்லாம் எதிர்கொள்ளும் துணிவு இவர்களிடம் வளர்கிறது.இவர்கள் சாதிக்கட்டும் என்று நெஞ்சாறப் பிரார்த்திக்கிறேன்.

இப்போதைக்கு நம் கடமை நம் அயலில் இவ்வாறான சிறு செடிகள் விருட்சமாய் வளரத் துடித்துக் கொண்டிருக்கலாம்;துளி தண்ணீர் விடுங்கள்.

சமூகம் என்ற வகையில் இப்படியான சின்ன உழைப்பாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடப்பாடு நம் மீது நிறையவே இருக்கிறது.

No comments:

Post a Comment