Saturday, July 5, 2014

சிறுவர்களின் ரமழான் 1


Shameela Yoosuf Ali

காய்ந்து போன கட்டாந்தரை மனங்களெல்லாம் இளகி பச்சையும் மஞ்சளுமாய் பூத்திக்குலுங்கும்கரிசல் நிலங்களாக, வஹிக்குளிர் சுமந்து வருகிறது ரமழான்.

ஒரு முஸ்லிமின் பாதையில் ரமழான் குறுக்கிடும் கணங்கள் அபூர்வமானவை.ஆயிரம் மாதங்களை விட அதிகமான நாட்களை உள்ளிருத்தி வரும் ரமழான் எங்களிடம் தங்கப்போவதென்னவோ ஆங்கிலக் கலண்டரின் படி ஒரே மாதம் தான்.

இலங்கையைப் பொறுத்தளவில் ரமழான் மாதம் பாடசாலை விடுமுறை காலம்.ரமழானில் சிறுவர்களை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி பல அன்னையரை இப்போதே குடைந்தெடுக்கத் தொடங்கியிருக்கும்.பிஞ்சு உள்ளங்களில் அல்லாஹ்வை எழுதவும் தேவதைக்கதைகளிலிருந்து சிந்தனைகளை மேலே உயர்த்தவும் ஆக்கத் திறனை நெறிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் இது.சிறுவர்கள் எனும் போது 2 வயதிலிருந்து 14 வரையிலான பல்வேறு கட்டங்களிலுள்ள அனைவரையும் குறிக்கும்.கீழே குறிப்பிடப்படும் செயற்பாடுகளை அவரவர் வயதிற்கேற்றவாறு இலகுபடுத்தவோ அல்லது கொஞ்சம் தரப்படுத்தவோ இயலும்.

ரமழானுக்கொரு வரவேற்பு

ரமழானை வரவேற்க வீடுகளை ஆயத்தப்படுத்தும் வழமை எமது கடந்த தலைமுறையினரின் எழுதப்படாத சட்டம்.முஸ்லிம்களின் வாழ்க்கையில் ரமழான் மிக முக்கியமானதொரு காலம் என்பதை சிறுவர்களுக்குப் புரிய வைக்கவும் நிறைந்த மனதோடு ரமழானை வரவேற்கவும் சில செயற்பாடுகளை நாம் ஒழுங்கு செய்யலாம்.

அறைகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற பொருட்களை அகற்றி தூசு தட்டி வீட்டைக் கழுவும் போது சிறுவர்களை அவர்களுக்குடைய வயதுக்கேற்ற அமைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.வீட்டின் முன்னால் ‘ரமழானே உன்னை வரவேற்கிறோம்’ என்ற வாசகம் (ஆங்கிலம் அல்லது அறபு மொழிகளைலும் இது அமையலாம்) தாங்கிய ஒரு சின்ன ‘பேனர்’ஐ சிறுவர்களுக்கு செய்யச் சொல்லுங்கள்.

இது ஒவ்வொருவரின் கற்பனைத் திறனுக்குமேற்ப துணியில் அல்லது வெள்ளை நிற அல்லது வேறு நிறத்தாள்களில் அமையலாம்.ஷஃபான் மாத இறுதிப்பகுதியிலிருந்து இந்த பேனரை உங்கள் வீட்டு வாசல்களில் தொங்க விடலாம்.இது சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ரமழானை எதிர்பார்த்திருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த துணையாகும்.

தொடரும்...

2011

No comments:

Post a Comment