Thursday, July 10, 2014

அந்த யூத சகோதரனும் நாமும் -என் நோன்பு கால டயறி


பலஸ்தீனம்…நபிமார்களின் கால் பதிந்த பூமித்துண்டு.

உலக வரலாற்றில் தொடர்ந்தேர்ச்சியாக அநியாயத்துக்குள்ளாக்கப்பட்ட ஒரே நாடு.

ஒரு காலத்தில் பழங்களும் பூக்களுமாய் ஒரு சொர்க்கத்தின் மிச்சமாய் இருந்த நிலம்.

முஸ்லிம்களின் முதல் கிப்லா பைதுல் முகத்திஸ்ஸினைத் தாங்கி நிற்கும் பேறு பெற்ற பெரும் பூமி.

தளிராய் துளிர்க்க முன்னரே குர்ஆன் சுமக்கும் பிஞ்சுக்கள்.
உழைத்து உழைத்து சிவந்து கன்றிப்போன அன்னையர் கரங்கள்.

துப்பாக்கிச் சப்தங்களோடு பள்ளிக்கூடத்தின் இடிந்த சிதிலங்களில் கற்கும் மாணவர்கள்.

நெஞ்சுரமும் அமைதியும் கொண்ட மனிதர்கள்.

தம் தாய் பூமியிலே அகதிகளாக்கப்பட்டு,சொல்லொணாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்குமுள்ளாகி,
விரட்டப்பட்டு,கைதிகளாக்கப்பட்டு இன்று வரை நீதி கிடைக்காத பலஸ்தீனர்கள் இறுதி வரை தம் போராட்டத்தைத் தொடரும் திடம் வியக்க வைக்கிறது.

அல்லாஹ்வை உள்ளத்தில் சுமந்தவர்கள்;துப்பாக்கிக் குழலுக்கு மேலால் தைரியமாய் நெஞ்சுயர்த்தி நடப்பவர்கள்.

கால்பந்தாட்டம் பார்த்து நாமெல்லாம் களித்துக் கொண்டிருந்த போது காஸாவில் உயிரோடு சிறுவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.

கால்பந்தாட்டம் தேவை தான்; அதே நேரம் பலஸ்தீன் எனும் துயரம் எங்கள் இதயம் பிராண்டவில்லையெனில் நாங்கள் உயிருள்ள சடங்கள் மட்டுமே.

பலஸ்தீனப் போராட்டம் நீதியின் போராட்டம்.
நசுங்கிய தன்மானத்தை மீட்டெடுக்கும் போராட்டம்.

இஸ்ரேலில் இருந்து கொண்டே பலஸ்தீனப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு யூத சகோதரனை நீண்ட காலமாய் நான் அறிவேன்.இஸ்ரேலின் அழிவை இஸ்ரேலுக்குள்ளிருந்தே எழுத ஒரு குழு நிச்சயமாய்க் கிளம்பி வரும்.

பலஸ்தீனப் போராட்டத்தை அங்கீகரிக்கும்
முஸ்லிம் உம்மத்தின் ஓரங்கம் என்ற வகையில் எங்களது பொறுப்பு இன்னும் பாரமாயிருக்கிறது என்பதை அந்தச் சகோதரனின் பங்களிப்பு எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

நீளும் நோன்பிலும்,இப்தார் வேளைகளிலும்
ஒவ்வொரு தொழுகையிலும் பலஸ்தீனத்து சொந்தங்களை கொஞ்சமாவது எண்ணிப்பாருங்கள். உயிரோட்டமான துஆக்கள் உயிரின் ஆழத்திலிருந்து வரட்டும்.

உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்;பலஸ்தீனத்துக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்;இப்போதே,மிக அவசரமாகத் தேவைப்படுகிறீர்கள்.

நீங்கள் தயாரா?

By Shameela Yoosuf Ali

2014.July 9th
#ரமழான் #பலஸ்தீனம் 

No comments:

Post a Comment