Shameela Yoosuf Ali
அவளுக்கு இறக்கைகள் இருப்பதாக பலகாலம் அவளுக்கே தெரியாது.
இறக்கைகள் சைத்தானுக்குரியவை என்று தான் அவளுக்குச் சொல்லப்பட்டது.
தேவதூதர்களுக்கும் அவை உண்டென அவளாகத் தான் அறிந்தாள்
இறக்கைகளின் அபாயங்களையும் வான்பரப்பில் அவள் சந்திக்கக் கூடிய துர்சொப்பனங்கள் பற்றியும் வாய் வலிக்கச் சொன்னார்கள்.
வேண்டாமென்று சொல்லச் சொல்ல வேண்டும் வேண்டுமென்று மனசு அடம்பிடிக்கும்.
அவளுக்குள்ளும் இறக்கை கொண்டு பறத்தல் பற்றிய ஆசை கிளர்ந்தது.
அவளுடைய இறக்கைகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.
கடந்த காலத்தின் தூசு நிரம்பிய பரணொன்றில் அவை அடங்கிக் கிடந்தன.
உனக்கு அனுபவம் போதாது அல்லது உன்னால் இந்த வயதில் பறக்க முடியாது இப்படி இருவகையில் சொல்லிப் பார்ந்தார்கள்.
அவளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்களைக் களைந்தாள்.
இறக்கைகளைத் தூசு தட்டினாள்; சுற்றியிருந்தவர்கள் இருமத் தொடங்கினார்கள்.
இறக்கைகளில் ஜீவகளை நிரம்பியது.
அவள் பறக்கத் தொடங்கினாள்.
மிக நிம்மதியுடனும் அதீத வேகத்துடனும் அவள் மேலெழுந்தாள்.
வானம் நினைத்ததை விட மிக மிக விசாலித்திருந்தது
சமீலா யூசுப் அலி
February 20, 2015